Tuesday, October 20, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 2

ஊரில் காவ்யாவின் வீடு எப்போதும் ஆட்களால் நிறைந்திருக்கும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா , சித்தப்பா, சித்தி, மித்ரா, பிரவீன் போதாதற்கு அவ்வப்போது உள்ளூரில் உள்ள சொந்தக்காரர்கள் வரப்போக என வீடு ஜேஜேவென்று இருக்கும்.

அதிலும் காவ்யா என்றால் அனைவருக்கும் கொள்ளை பாசம். அவளது அமைதியான அன்பான சுபாவமும் சிரித்த முகமும் அனைவரையும் கவர்ந்துவிடும். ஆளாளுக்கு அவளை தலைமேல் வைத்து கொண்டாடுவார்கள்.

மித்ராவும் ப்ரவீனும் எப்போதும் அவள் பின்னாலேயே  சுற்றிக்கொண்டிருப்பார்கள். அத்தனையும் விட்டு, அவளை அனைவரிடமிருந்து பிரித்து இத்தனை ஆயிரம் மைல்கள் தாண்டி கூட்டிப்போவது அரவிந்தனுக்கு முதலில் தயக்கமாகத்தான் இருந்தது.

திருமணம் முடிந்து சிலநாட்கள் தஞ்சாவூரில் அவன் வீட்டில் இருக்கும்போதே திடீரென்று அம்மா அப்பா நினைவு வந்து, பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கலங்கி விடுவாள். அவள் மனதை புரிந்தவனாக மறுநாளே அவள் வீட்டுக்கு அழைத்துசென்றுவிட்டு வருவான்.

திரும்பி வந்ததும் "தேங்க்ஸ் அத்தான்" என்று சொல்லி மகிழ்ச்சியில் அவனை கட்டிக்கொள்வாள். அதன் பிறகு மொரீஷியஸில் இருந்த பத்து நாட்களிலும் குடும்பத்தை பற்றி பேசாமல் ஒரு நாளும் இருக்கமாட்டாள்.

சட்டென்று ஒருநாள் "எல்லாரும் வந்திருந்தா  இன்னும் ஜாலியா இருந்திருக்கும் .. இல்ல அத்தான் " என்று குண்டை தூக்கிப்போட பதறியவனாக   "அடிப்பாவி.. நாம வந்திருக்குறது ஹனி மூன்.. பேமிலி டூர் இல்ல " என்றான் சிரித்துக்கொண்டே.

நாட்கள் ஆக ஆக அவனது அன்பிலும் காதலிலும் அணைப்பு தந்த சிலிர்ப்பிலும் கொஞ்சம் வீட்டைப்பற்றி யோசிப்பது குறைந்துதான் போயிருந்தது அவளிடம்..

ஆனாலும் இப்போது யாரைப்பற்றி யோசித்து கண்கலங்குகிறாள் என்று புரிந்துகொண்டவன்  அவள் மனதை மாற்றும் வகையில் "ஹே காவ்யா.. என் காபி அவ்ளோ கொடுமையா இருக்கா.. சாரி டா " என்று சீரியசாக சொல்வதைப்போல சொன்னதும் கண்களில் ஈரம் படர சிரித்துக்கொண்டவள் "இல்ல அத்தான்.. சூப்பரா.. அம்மா போடறமாதிரியே இருக்கு.. " என்றாள் பக்கவாட்டில் அவன் தோளில் சாய்ந்துக்கொண்டே.

"ஹ்ம்ம் .. அம்மா ஞாபகம் வந்துடுச்சா..சாரி டா .. உன்ன இவ்ளோ தூரம் பிரிச்சி கூட்டிட்டு வந்துட்டேன்" என்று உண்மையாகவே வருத்தத்துடன் சொன்னவனை "அச்சோ அத்தான்.. அப்படியெல்லாம் நினைக்காதீங்க ப்ளீஸ்.. எனக்கு உங்களோட இருக்கறதுதான் சந்தோசம்.. அம்மா அப்பாவை விட்டு இதுவரை நான் எங்கயும் போனதில்லயா.. அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சி..மத்தபடி நான் ஓகே.." என்று காபி கப்பை கீழே வைத்துவிட்டு அவனிடம் பூனைக்குட்டியாய் ஒண்டிக்கொண்டாள்.

சிரித்துக்கொண்டவன் அவள் தலையை வருடியபடியே "காவ்யா.. உனக்கு எப்போ ரொம்ப கஷ்டமா இருக்கோ என்கிட்ட ஓப்பனா சொல்லு.. நாம ஒடனே ஊருக்கு போய்டலாம்.. சரியா.. எனக்கு நீ ஹாப்பியா இருக்கணும்.. அதுதான் முக்கியம் .. மத்த எல்லாத்தையும் விட.. ஹ்ம்ம் ஓகே வா?" என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்து காதல் பொங்க "அத்தான்.. நான் எவ்ளோ லக்கி தெரியுமா? எனக்கு கிடைச்ச மாதிரி husband யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.. "என்று ஆத்மார்த்தமாக சொன்னவளை "நான் தான் லக்கி காவ்யா.. இந்த மாதிரி தேவதை யாருக்கு wife ஆ கிடைப்பாங்க.. என்னப்பத்தியே யோசிச்சி எனக்காக எல்லாத்தயும் விட்டுட்டு வந்திருக்கயே.. ஸ்கூல் காலேஜ்க்கு கூட நீ நம்ம தஞ்சாவூரை தாண்டி வெளிய போகல.. இப்போ இவ்ளோ தூரம் எனக்காக.." என்று சொல்லிக்கொண்டிருந்தவன் சட்டென்று கன்னத்தில் அவள் இட்ட அழுத்தமான முத்தத்தில் வார்த்தை இழந்தான்.

ஆச்சர்யமாக பார்த்தவனை குறும்பாக பார்த்தபடி "இனிமே இப்படி சென்டிமென்ட்டா பேசி எனக்காக வருத்தப்பட்டிங்கனா இதுதான் பனிஷ்மென்ட்.." என்றாள். "அச்சச்சோ.. பயங்கரமான பனிஷ்மெண்ட்டா இருக்கே..அதனால நான் இந்த தப்ப.." என்று நிறுத்தியவனை கேள்விக்குறியாய் அவள் பார்க்க, "அடிக்கடி பண்ணுவேன்" என்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

சிரிப்பும் சீண்டலுமாக பேசிக்கொண்டு ஒன்றாக கிட்சன் வேலைகளை முடித்தனர். காவ்யா "அத்தான் உங்க டர்ன் முடிஞ்சிடிச்சி.. இனிமே நீங்க வீட்ல எந்த வேலையும் செய்யக்கூடாது.. monday ல இருந்து ஆபீஸ் போகணும்ல..சோ ஆபீஸ் வேல மட்டும் தான் நீங்க பாக்கணும்..மீதி எல்லாம் நான் பாத்துக்குறேன்.." என்று பொறுப்பான மனைவியாய் சொன்னதை ரசித்தவன் "சரிங்க.. பொண்டாட்டி.." என்று எதையோ நினைத்து சிரித்தவனை "என்ன அத்தான்? எதுக்கு சிரிக்கிறீங்க" என்றாள்.

"இல்ல ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சி நின்னு என்ன சைட் அடிச்ச அந்த குட்டி பொண்ணு காவ்யா எங்கன்னு நினைச்சி பாத்தேன்" என்றதும் வெட்கம் அவனை பார்க்க விடாமல் தடுக்க "நான் ஒண்ணும் உங்கள ஸைட்டெல்லாம் அடிச்சதில்லை.. " என்றாள் தலையை குனிந்தவாறே..

"ஓய்.. நீ எப்படியெல்லாம் என்ன சைட் அடிச்ச .. எப்போ பாத்தாலும் என்னைப்பத்தி பேசி மித்ரா பிரவீனை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ண.. என் நெனப்பு வரப்போல்லாம் நீ என்ன பண்ணுவ .. எல்லாம் எனக்கு தெரியும்.. " என்று விட்டு இன்னும் பிரிக்கப்படாத அவன் சூட்கேஸிலிருந்து அந்த பெரிய பார்சலை எடுத்து வந்து பிரித்துக்காட்டினான்.

அது அவள் வரைந்த அவனது ஓவியங்களும் அவனை நினைத்து எழுதிய கவிதைகளும் ஸ்ரீராமஜெயமும் பக்கம் பக்கமாக எழுதிய அவனது பெயரும் உள்ள நோட்டுப்புத்தகம். கண்கள் விரிய "இது எப்படி உங்ககிட்ட வந்திச்சு அத்தான்..நான் எங்கேயோ வச்சிட்டேன்னு தேடிட்டு இருந்தேன்"  என்றாள்.

"இத என்னைக்கு பாத்தேனோ அன்னைக்குதான் நீதான் என் wife ன்னு முடிவு பண்ணேன், அதனால இது என்கிட்டேதான் இருக்கணும்னு எடுத்திட்டு வந்திட்டேன் " என்றான் கண்கள் சிமிட்டியபடி.

பொய்யாக முறைத்தபடி "எங்கிட்ட இருந்து சுட்டுட்டு வந்துடீங்களா?" என்றாள்.

"ஹ்ம்ம் நீ என் இதயத்தையே என்கிட்டருந்து சுட்டுட்டு போய்ட்டயே .. அதுவும் எப்போ தெரியுமா.. நான் காலேஜ் முடிச்சி இங்க யூனிவெர்சிட்டிக்கு அப்ளை பண்ணிட்டு தாத்தா வீட்ல நாங்கெல்லாம் கொஞ்ச நாள் இருந்தோமில்லை.. அப்பவே.. இந்த அழகான கண்களால் என்னை ஒரு பார்வை பார்த்த தெரியுமா.. அங்க விழுந்தவன் தான்.." என்று மயக்கும் குரலில் காதருகே குனிந்து அவன் சொன்னதும் வெட்கத்தில் முகத்தை மூடிகொண்டவளை "நான் நெனச்சே பாக்கல.. இந்த தேவதை என் wife ஆ அதுவும் என்கூட தனியா அமெரிக்கால வந்து இருப்பான்னு.. உன் காதலுக்கு ரொம்ப பவர் காவ்யா" என்று அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

மதியம் காவ்யா செய்த சிம்பிளான தக்காளி சாதத்தையும் உருளைக்கிழங்கு வருவலையும் ரசித்து சாப்பிட்டவன் "காவ்யா, ஈவினிங் இந்தியன் ஸ்டோர்ஸ் போலாம்.. நேத்து நான் மட்டும் போனதால எனக்கு தெரிஞ்சதை வாங்கிட்டு வந்தேன். நான் இங்க எதோ சாப்பிட்டு அட்ஜஸ்ட் ஆகி பழகிட்டேன்.. ஆனா நீ அப்படி இல்ல.. அங்க வீட்ல நல்லா டேஸ்டியா ஹெல்த்தியா சாப்பிட்டு இங்க சிம்பிளா சாப்பிடுறது எனக்கு கஷ்டமா இருக்கு " என்றான்.

"அத்தான் இந்த சிம்பிள் சாப்பாடு உங்ககூட சாப்பிடுறது எனக்கு எவ்ளோ பிடிச்சிருக்கு தெரியுமா.. ஆனா நாளையிலிருந்து நான் நல்லா சமைக்க ஆரம்பிச்சுடறேன்..நம்ம எங்கேஜ்மெண்ட்க்கு அப்பறம் நா நெறய டிஷேஸ் செய்ய கத்துக்கிட்டேன் தெரியுமா?" என்று குழந்தையின் ஆர்வத்தோடு சொன்னாள்.

"ஹ்ம்ம் தெரியும்.. மேடம் அம்மாக்கு அடிக்கடி கால் பண்ணி அத்தானுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு கேட்டு கத்துக்கிட்டிங்களாமே..அம்மாவுக்கு ஒரே பெருமை " என்றான்.

"அத்தை சொல்லிட்டாங்களா?" என்று நாக்கை கடித்துக்கொண்டவள் "ஆனா யாருக்கும் தெரியாம youtube பார்த்து நான் ஒண்ணு கத்துக்கிட்டேன் அத்தான்.. ஆயில் பெயின்டிங். உங்கள தான் முதல்ல வரைஞ்சேன்..”  என்று அவளுடைய சூட்கேசில் அவளது புடவைகளுக்கு நடுவில் மிகவும் கவனமாக வைத்திருந்த ஓவியங்களை எடுத்து வந்தாள்.

 

கைகளில் வாங்கியவன் ஸ்தம்பித்து போனான். அரவிந்தன் ராஜகுமானைபோல் அழகாய்  சிரித்தபடி ஒரு ஓவியமும், வெற்றி கொண்ட ஆண்மகனாய் குதிரையில் பறந்து வருவதைப்போல ஒரு ஓவியமும் மிகவும் தத்ரூபமாய் வரைந்திருந்தாள். கண்கள் அன்பினால் நீரை சொரிய "எப்படா இதெல்லாம் வரைஞ்ச? எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? ஆனா பிரின்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே " என்றான் சிரித்துக்கொண்டே.

"எனக்கு நீங்க எப்பவும் ராஜகுமாரன்தான் அத்தான்..என்னை அன்பால ஆள வந்த ராஜகுமாரன்" என்றாள் அழகிய கண்களால் அவனை கூர்ந்து பார்த்துக்கொண்டு.

 

12 comments:

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...